தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை பணிகள் நடந்தன.
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 2,606 இடங்கள் நிரப்பப்பட்டன.
முதல் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புகளில் சேர இடம் கிடைத்த மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை வியாழக்கிழமை நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பில், மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் பெற்றுக் கொண்டன.
மருத்துவப் பரிசோதனையில், மாணவர்களின் கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இவற்றுடன் அவர்களின் ரத்த அழுத்தம், உடல் பருமன், உயரம் ஆகியவையும் கணக்கிடப்பட்டது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதி பெற்ற 216 மாணவர்களுக்கு கல்லூரி கலையரங்கில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை பணிகள் நடந்தது.
இதில் 215 மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்லூரியின் நிர்வாக அலுவலர்கள் 20 பேர் மற்றும் 40 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்கு உரிய பணிகளை மேற்கொண்டனர்.
படிப்பிலிருந்து விலகினால் ரூ.5 லட்சம் நஷ்டஈடு
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த அனைத்து மாணவர்களிடமும், ராகிங்குக்கு எதிரான உறுதிமொழியும், எம்.பி.பி.எஸ். படிப்பை முழுமையாக முடிக்காமல் இடையில் படிப்பிலிருந்து விலக நேர்ந்தால் அரசுக்கு ரூ.5 லட்சம் செலுத்துவதற்கான ஒப்புதலும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டது.
No comments:
Post a Comment