Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 20 November 2014

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரு உதவிப்பேராசிரியர்கள் உள்ளிட்ட 6 பேர் நிரந்தர பணிநீக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த இரு உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 4 பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013 ஏப்.5-ம் தேதி நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அவருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. மேற்கண்ட இருவரும் கடந்த ஏப்.8-ம் தேதி திங்கள்கிழமை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா அலுவலகத்தில் பொறுப்பேற்றனர். பின்னர் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீது சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நிதிநெருக்கடியை போக்க பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் 12500 ஆசிரியர், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.  இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்களை நம்பகத்தன்மை சான்றிதழ் அங்கீகாரம் பெற அந்தந்த கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களில் சேர்ந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
6 பேர் பணிநீக்கம்:
பல்கலைக்கழக நிர்வாகம் முதல் கட்டமாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் சுப்பிரமணியன், ஆங்கிலத்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் ராஜ்மோகன் மற்றும் லக்னோ படிப்புமையத்தில் பணியாற்றும் தொடர்பு அலுவலர் அருள், பொறியியல் புல நூலகத்தில் பணியாற்றும் டெக்னிகல் அஸிஸ்டன்ட் பாண்டியன், பல்கலைக்கழக நிர்வாக கட்டட அலுவலகத்தில் பணியாற்றும் கருத்தியல் உதவியாளர் அப்பாதுரை, தொலைதூரக்கல்வி மையத்தில் பணியாற்று இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகிறது.
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மேலும் பலர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், அரசின் பல்வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: