Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 12 July 2014

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: 2 ஆயிரம் பேர் சேர்ந்தனர்; கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 4,520 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 5 நாள்களில் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 3,500-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இதில் 2 ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். கடைசி நாளான சனிக்கிழமை (ஜூலை 12) கலந்தாய்வில் பங்கேற்க 931 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவர்கள், கடைசி நாள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கும் கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,000-த்துக்கும் அதிகமான இடங்களும், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு 2,400 இடங்கள் வரை நிரம்பின. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டும் ஏறத்தாழ அதே அளவிலான இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: