Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 21 December 2013

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும்-குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டுகின்ற தலைசிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.
சென்னை லயோலா கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வணிகவியல் மற்றும் பொருளாதாரப் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை (டிச.20) நடைபெற்றது. இந்த புதிய கல்வி மையத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியது:
உயர் கல்வித் துறையை பொருத்தவரை இந்தியாவில் இப்போது 659 பல்கலைக்கழகங்கள், 33,000 கல்லூரிகள், ஐஐடி, என்ஐடி உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் என வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1.86 கோடி பேர் உயர் கல்வியில் சேருகின்றனர்.
இப்படிப்பட்ட மிகப் பெரிய வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளபோதும், உலக அளவில் தலைசிறந்த 200 உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஒரு இந்தியப் பல்கலைக்கழகம்கூட இடம்பெறாதது மிகப் பெரிய வருத்தமளிக்கிறது.
12-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்போது இந்தியாதான் உயர் கல்வியில் தலைசிறந்த நாடாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. சீனா, இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் உயர் கல்வியில் பல மடங்கு முன்னேறியுள்ளன.
இதற்கு, உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை, இந்தியாவில் 18 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
அதே நேரம், இது ஜெர்மனியில் 21 சதவீதமாகவும், அமெரிக்காவில் 34 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலையை மாற்ற நாம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். வாழ்க்கைத் திறன், பேச்சுத் திறன், புதுமையாக சிந்திக்கும் திறன் உடையவர்களாக மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு கற்றுத் தருபவர்களும் தலை சிறந்த ஆர்வத்தை தூண்டுகின்ற ஆசிரியர்களாக இருக்க வேண்டும். ஆனால், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது.
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுபோல் அறிவுசார் சொத்துக்கு காப்புரிமை பெறும் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போதும் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 42,000 காப்புரிமைகளுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்தவும் கல்வி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார் அவர். தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
விழாவில் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜி. விஸ்வநாதன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு குடியரசுத் தலைவர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் பாதிரியார் ஜி. ஜோசப் ஆண்டனி சாமி, ரெக்டர் பாதிரியார் ஏ.எம். ஜெயபதி ஃபிரான்சிஸ், செயலர் மற்றும் தாளாளர் பாதிரியார் எம். ஆல்பர்ட் வில்லியம் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

No comments: