Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 27 November 2013

சென்னை மாநகராட்சி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் ஐஐடி தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதால் இந்தத் திட்டம் மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்கள் சேர விரும்புகிறார்கள் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்த பிறகு பயிற்சிகள் பற்றி முடிவெடுக்கப்படும்.
கடந்த புதன்கிழமை பட்டதாரி இளைஞர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிமையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கானப் பயிற்சி மையம் சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கான மையம் பெரம்பூர் பந்தர்கார்டன் சென்னை மேல்நிலைப் பள்ளியிலும் தொடங்கப்பட்டது. சைதாப்பேட்டையில் பதிவு செய்திருந்த 533 பேரில் 235 பேரும் பெரம்பூரில் பதிவு செய்திருந்த 131 பேரில் 90பேரும் பயிற்சியில் கலந்து கொண்டனர். 30வயதுக்குட்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கவிருப்பதால் அதற்கான மாதிரித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு வாரம் மூன்று முறை வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு வகுப்புகள் முடிந்துள்ளன.
இது பற்றி மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
இதேபோன்று வங்கித் தேர்வு, பொறியியல் நுழைவு தேர்வான ஏ.ஐ.இ.இ.இ. உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி நடத்தவுள்ளோம். மே மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி தொடங்கவுள்ளோம். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்பதைத் தலைமையாசிரியர்கள் கூறிய பிறகு எப்போது, எப்படிப் பயிற்சிகள் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: