Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 5 July 2014

TRB-TET: முடிவுக்கு வந்த வழக்குகள் - விரைவில் ஆசிரியர் தேர்வு பட்டியல்?

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது. டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில் உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார். அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், வெயிட்டேஜ் கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது.
இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார். இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, தேர்வு பட்டியலை வெளியிட இனி எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.
ஆசிரியர் தேர்வுக்கான புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில் தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை இப்போதே துவக்கி உள்ளோம். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

No comments: