Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 5 August 2014

DSE: பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம்: அனுமதிக்காகக் காத்திருக்கிறது

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
புதிய பாடத்திட்டத்துக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கவில்லையெனில் அடுத்த கல்வியாண்டில் (2015-16) பிளஸ் 1 வகுப்பில் புதிய புத்தகங்களை வழங்க முடியாது என்பதால் வல்லுநர் குழு வட்டாரங்கள் அனுமதி உடனே வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.
பிளஸ் 1 வகுப்பில் 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்பில் 2016-17-ஆம் கல்வியாண்டிலிருந்தும் புதிய பாடத்திட்டம் அமல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத்திட்டத்துக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பொறுப்பை அப்போது கூடுதலாக வகித்த அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, அந்தக் குழுவின் ஆலோசனைகளின் படி, புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனாலும், புதிய பாடத்திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் புத்தகம் எழுதும் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் புத்தகம் எழுத தனித்தனியே குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களில் துறை நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மேல்நிலைக் கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
 இந்தக் குழுக்கள் பிற மாநிலங்களில் உள்ள மேல்நிலைக் கல்வி பாடப்புத்தகங்கள்,  என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து புதிய புத்தகங்களை எழுதுவார்கள். மேலும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களை ஒப்பீடு செய்தும் பாடப்புத்தகங்கள் எழுதப்படும். எழுதப்பட்ட புத்தகங்களில் பிழைகளை நீக்கும் பணிகளும் நடைபெறும்.
இந்த நடைமுறைகள் முடிந்து சி.டி. வடிவில் புத்தகங்கள் தயாராக குறைந்தபட்சம் 6 முதல் 8  மாதங்கள் வரை ஆகும். அதன்பிறகு, புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்ல 2 முதல் 3 மாதங்கள் வரை அவகாசம் தேவைப்படும்.
 எனவே, புதிய பாடத்திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் கிடைத்தால்தான் அடுத்த கல்வியாண்டில் புதிய புத்தகங்கள் வழங்குவது சாத்தியமாகும். இல்லையென்றால், அடுத்த கல்வியாண்டிலும் பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டம் மாறுவது சந்தேகமே என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் திணறுகின்றனர்.
இதை மனதில் வைத்து, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவுக்கு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

No comments: