
ஒவ்வொரு ஆண்டும் பி.இ. படிப்பிற்கு மாணவர்கள் முட்டி மோதுவர். இந்த ஆண்டு, மாணவர்கள் ஆர்வம் சற்று குறைவாக உள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனையான போதும் 1.73 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இவர்களில், 1.68 லட்சம் பேரின் விண்ணப்பம் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைவதற்கு படிப்பை முடித்தாலும் வேலைக்கு தகுதியானவர்களாக மாணவர்கள் தயாராகவில்லை என்பது நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. முக்கியமாக பி.இ. மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் இல்லை என்பது, பெரிய குறையாக கூறப்படுகிறது. இதனால், போதிய வேலை வாய்ப்பு இல்லை என்ற தகவல் பரவுகிறது. இதன் காரணமாக பி.இ. படிப்பிற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இந்த ஆண்டு சரிந்துவிட்டது.
இந்த பிரச்னைகள் அனைத்தையும் உணர்ந்துள்ள அண்ணா பல்கலை பி.இ. படிப்பை பழையபடி தூக்கி நிறுத்தவும், மாணவர்களுக்கு உரிய தகுதியை அளிக்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியர்கள்
திறமையான மாணவர்களை உருவாக்க கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் தேவை. பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றவர்கள் அல்ல.
சுற்றறிக்கை
மாநிலம் முழுவதும் உள்ள 560 பொறியியல் கல்லூரிகளிலும், சிறப்பாக பாடம் நடத்தக்கூடிய திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்கள் அனைவரையும் ஒரு குழுவாக இணைத்து, அவர்கள் மூலம் பிற கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலை திட்டமிட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு சுற்றறிக்கையை அண்ணா பல்கலை அனுப்பி உள்ளது.
அதில், "ஒவ்வொரு பாட பிரிவிலும், மிகச் சிறப்பாக பாடம் நடத்தக் கூடிய ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் அடையாளம் காண வேண்டும். பின், அவர்கள் பாடம் நடத்துவதை "வீடியோ"வாக எடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் முழு விவரங்களையும் சேர்த்து பல்கலைக்கு அனுப்ப வேண்டும்" என, தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற வீடியோக்களை அனைத்து கல்லூரிகளில் இருந்து பெற்றதும், அதில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களை ஒரு குழுவாக இணைத்து, அனைத்து கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
இணையதளம்
மேலும், சிறந்த ஆசிரியர்களின் கற்பித்தலை, இணையதளம் வழியாக நேரடி நிகழ்ச்சியாக, அனைத்து கல்லூரிகளுக்கும் ஒளிபரப்பவும் பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட ஆசிரியரின் சொற்பொழிவு, வகுப்புகள் குறித்து முன்கூட்டியே அனைத்து கல்லூரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் சொற்பொழிவை, வகுப்புகளை தங்கள் கல்லூரிகளில் இருந்தபடியே பார்க்கலாம்.
இந்த திட்டங்கள் மிக விரைவில் அமலுக்கு வரும் என பல்கலை வட்டாரம் நேற்று தெரிவித்தது. சரிந்துள்ள பி.இ. படிப்பின் மதிப்பை தூக்கி நிறுத்தவும் பி.இ. படிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்பிற்குரிய தகுதியை பெறவும், அண்ணா பல்கலை எடுக்கும் நடவடிக்கைகள், எந்த அளவிற்கு பலனை அளிக்கிறது என்பது வரும் ஆண்டுகளில் தெரியும்.
2,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி
பி.இ. கலந்தாய்வுக்குப் பின் முதலாம் ஆண்டில் சேர உள்ள மாணவர்களுக்கு, வகுப்பு பாடங்களை எடுப்பதற்கு முன் அவர்களை பொறியியல் படிப்பு படிக்க மன ரீதியாக எப்படி தயார்படுத்த வேண்டும் என்பதற்காக 2,500 ஆசிரியர்களுக்கு அண்ணா பல்கலை பயிற்சி அளிக்கிறது. இந்த பயிற்சி நேற்று பல்கலை வளாகத்தில் துவங்கியது. வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. இதில், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களும் கலந்து கொள்கின்றனர். கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆக. 15 வரை
இது குறித்து, பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது: பிளஸ் 2 முடித்து பொறியியலுக்கு வரும் மாணவர்கள் பயப்படாமல் பி.இ. படிப்பை எதிர்கொள்ளும் வகையிலும், மன ரீதியாக அவர்கள் பி.இ. படிப்பதற்கு தயார்படுத்தும் வகையிலும் இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 2,500 ஆசிரியர் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கு, சிறந்த ஆசிரியர் குழு, புதிய மாணவர்களை எப்படி அணுக வேண்டும்; அறிவியல், ஆங்கிலம், கணிதம் பாடங்களை எப்படி கற்க வேண்டும்; பிளஸ் 2 வகுப்பில் அவர்கள் படிக்காமல் விடுபட்ட பகுதிகளை எப்படி படிப்பது என்பது உள்ளிட்ட பல தகவல்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சியாக தரப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை புதிய மாணவர்களுக்கு இந்த பயிற்சி அமல்படுத்தப்படும். இதன் மூலம் பொறியியல் பாடங்களை நன்கு புரிந்துகொள்வதுடன் நம்பிக்கையுடன் பி.இ. படிப்பை படிப்பர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தகுதியான ஆசிரியரே முக்கியம்
பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்த அண்ணா பல்கலை பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அனைத்து கல்லூரிகளிலும், தகுதிவாய்ந்த ஆசிரியர் பணியாற்றுவது, மிகவும் முக்கியம். அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே தகுதிவாய்ந்த ஆசிரியர் பணிபுரிகின்றனர்.
*இன்ஜினியரிங் கல்லூரிகளில் துறைத் தலைவர்கள், அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கில பாடங்களை கையாளும் ஆசிரியர் கண்டிப்பாக பி.எச்டி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அண்ணா பல்கலை கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பி.எச்டி. பட்டம் பெற்றவர்கள் பணியாற்றுகின்றனர்.
*ஆனால், தனியார் கல்லூரிகளில் பி.எச்டி. முடித்தவர்கள் அதிகளவில் பணியில் இருப்பதில்லை. எம்.இ., எம்.பில். படித்தவர்கள் வகுப்பு எடுக்கின்றனர். சில தனியார் கல்லூரிகளில் வெறும் பி.இ. படித்தவர்கள் கூட ஆசிரியர்களாக இருக்கின்றனர்.
*அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "தகுதி வாய்ந்த ஆசிரியர் இல்லாவிட்டால், கல்லூரி பாட பிரிவுகளுக்கான இடங்களை குறைப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனாலும், தகுதியில்லாத ஆசிரியர் பணியாற்றுவது, தனியார் கல்லூரிகளில் தொடரத் தான் செய்கிறது. இதை, எப்படி கட்டுப்படுத்துவது என எங்களுக்கும் புரியவில்லை" என, வேதனையுடன் தெரிவித்தார்.
தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யும் முன், கல்லூரிகளின் கட்டமைப்பு எப்படி உள்ளது, ஆசிரியர்களின் தகுதி என்ன? கல்லூரிகளில் படித்த மாணவர்கள் சொல்வது என்ன என்பது போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரிகளின் இணையதளத்தில் சென்று இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment