Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 3 May 2013

ஃப்ஷரி சயின்ஸ்


சிஃப்நெட் நடத்தும் பேச்சலர் ஆஃப் ஃப்ஷ்ரி சயின்ஸ் (நாட்டிக்கல் சயின்ஸ்) என்ற நான்கு ஆண்டு படிப்பில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த  மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கடலில் மீன்பிடி கப்பல்களை இயக்குவதற்கு தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1963ஆம் ஆண்டு கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தற்போது, சிஃப்நெட் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ஷரிஸ், நாட்டிக்கல் அண்ட் என்ஜினீயரிங் டிரெயினிங் என்ற பெயரில் செயல்படுகிறது. சென்னை ராயபுரத்தில் 1968ஆம் ஆண்டிலும் விசாகப்பட்டினத்தில் 1981ஆம் ஆண்டிலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டில் கடல் மீன்பிடி கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், என்ஜினீயர்கள், என்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே நிறுவனம் சிஃப்நெட்.

இங்கு பேச்சலர் ஆஃப் ஃப்ஷரி சயின்ஸ் (நாட்டிக்கல் சயின்ஸ்) என்ற பி.எஃப்.எஸ்சி. நான்கு ஆண்டு படிப்பு உள்ளது. மீன்பிடி தொழில்நுட்பங்கள், மீன்பிடி கப்பல்களை இயக்குதல், நாட்டிக்கல் சயின்ஸ் உள்ளிட்டவற்றை கற்றுத் தரும் படிப்பு. இது. பல்வேறு வகையான மீன்பிடிப்பு முறைகள், மீன்பிடி கப்பலை வடிவமைக்கும் முறை, நேவிக்கேஷன், என்ஜின்களை இயக்குதல், ஓசனோகிராபி மற்றும் மெரைன் மெட்ரியாலஜி, மீன் பிடித்தல், மீன்களைப் பதப்படுத்துதல்...இப்படி மீன்பிடி தொழில் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். அத்துடன் நேர்முகப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதாவது, கடல் மீன்பிடி கப்பலிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு கொச்சியில் உள்ள கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, பட்டங்களை வழங்கும். டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் அனுமதி பெற்ற படிப்பு இது.

இந்தப் படிப்பில் சேர என்ன படித்திருக்க வேண்டும்?

பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் மற்ற அறிவியல் பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று 20 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. மெர்ச்செண்ட் ஷிப்பிங் விதிமுறைகளின்படி, விண்ணப்பிக்கும் மாணவர்கள் மருத்துவரீதியாக உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும் அவசியம்.

எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?

நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். நுழைவுத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும். இந்த நுழைவுத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. நுழைவுத் தேர்வுக்கு 50 சதவீத மதிப்பெண்களும் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 10 சதவீத மதிப்பெண்களும் என நூற்றுக்கு எவ்வளவு மதிப்பெண்களை மாணவர்கள் எடுத்துள்ளார்கள் என்பதன் அடிப்படையில் இந்தப் படிப்பில் சேர தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த நுழைவுத் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும் நேர்முகத் தேர்வு ஜூலை 16ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்புக் கட்டணம் எவ்வளவு?

பி.எஃப்.எஸ்சி. படிப்பில் முதல் செமஸ்டருக்குக் கட்டணம் ரூ.23,800. இரண்டு, நான்கு மற்றும் ஆறாவது செமஸ்டர்களுக்கான கட்டணம் ரூ.7,500. மூன்று, ஐந்து மற்றும் ஏழாவது செமஸ்டர் கட்டணம் ரூ.19,500. இதுதவிர இதரக் கட்டணங்களும் உண்டு. கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. எர்ணாகுளத்தில் மாற்றத்தக்க வகையில் `Senior Administrative Officer, CIFNET'  என்ற பெயரில் இந்தத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுக்க வேண்டும். கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள சிஃப்நெட் மையங்களில் விண்ணப்பங்களை நேரில் பெறலாம். சிஃப்நெட் இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு, டிமாண்ட் டிராப்ட்டுடன்  ரூ.15 மதிப்புள்ள தபால் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ஜாதிச் சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். வயதுக்கான சான்றிதழ்களும் தேவை. சுயவிலாசமிட்ட இரண்டு கவர்களையும் (25செ.மீ. x 11 செ.மீ.) இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொச்சியில் உள்ள சிஃப்நெட் இயக்குநர் முகவரிக்கு மே 17ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு என்ன வேலைவாய்ப்பு என்று கேட்கிறீர்களா? இங்கு படித்து முடிக்கும் மாணவர்கள் மத்திய மீன்வள நிறுவனங்களிலும் மாநில மீன்வளத் துறைகளிலும் வேலையில் சேரலாம். தனியார் நிறுவனங்களிலும் மீன்பிடி கப்பல்களிலும் வேலை கிடைக்கும். பல்கலைக்கழகங்களிலும் வேலை கிடைக்கும்.

விவரங்களுக்கு: www.cifnet.gov.in

No comments: