Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 25 October 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த முகாம்கள் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன.

இந்த முகாம்களின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை அங்கேயே பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நவம்பர் 10-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 26) தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாநிலத்தில் தேர்தலின்போது எங்கெல்லாம் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தனவோ, அங்கெல்லாம் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
இதுவரை 44,513 பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக இதுவரை 44 ஆயிரத்து 513 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், 24 ஆயிரத்து 182 பேர் இணையதளம் மூலமும், 20 ஆயிரத்து 331 பேர் அரசு அலுவலங்களுக்குச் சென்று நேரிலும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
சிறப்பு முகாம்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், அந்த மையங்களை அணுகி தீர்வு பெறலாம் என்றும் பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் போதிய தகவல்களைப் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
இருப்பிடச் சான்று பிரச்னை: ஆன்-லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு இருப்பிடச் சான்று உள்ளிட்ட விவரங்களை நேரில் ஆய்வு செய்ய வாக்குச் சாவடி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் இல்லத்துக்கு வருவார்கள். அவ்வாறு வரும்போது, இருப்பிடச் சான்றுக்காக ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை அளிக்க வேண்டும். அதுபோன்ற ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், வீட்டுக்கு வந்த தபால் அட்டை அல்லது கடிதத்தை (அதில் தபால் துறையின் முத்திரை அச்சிட்டு இருக்க வேண்டும்) இருப்பிடச் சான்றாகக் காண்பிக்கலாம்.
ஆன்-லைனுக்கு முன்னுரிமை: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தேர்தல் ஆணையம் ஊக்குவித்து வருகிறது. மேலும், இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் அதிகரித்து வருவதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்-லைன் மூலமும், விண்ணப்பத்தை நேரில் அளிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பமும் தனித்தனியே ஆய்வு செய்யப்படும். அதில், ஆன்-லைன் வழியிலான விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: