ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதிசெய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கற்றல், கற்பித்தலில் சிறந்து விளங்குதல், பள்ளி மேம்பாட்டிற்கான பங்களிப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித் துறை, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து, 350 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதை, முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்ட குழு, ஆய்வு செய்து வருகிறது. இவர்கள் அனுப்பும் பரிந்துரை பட்டியலில் இருந்து, இறுதியாக, 350 பேர் தேர்வு செய்யப்படுவர்.
ஆகஸ்ட், 15ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையிலான மாநில குழுவிற்கு பட்டியல் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பின், மாநில குழு கூடி, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment