Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 9 June 2014

TNPSC: குரூப் - 2 இலவச பயிற்சி வகுப்பு: பங்கேற்க தேர்வர்களிடையே ஆர்வமில்லை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 2 தேர்வுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள, மாணவர்களிடம் ஆர்வம் இல்லை. சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளால் யாருக்கும் உபயோகமில்லை என, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், வருகிற 29ம் தேதி நடைபெற உள்ள குரூப் - 2 ஏ, தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறன்றன.

18 பேர் விண்ணப்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் குரூப் - 2 ஏ தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர, மொத்தம் 16 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்து 18ம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அதிலும், துவக்க நாளன்று 10 பேர் மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தனர். அடுத்த இரண்டு நாட்களில் இந்த எண்ணிக்கை 8 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த குரூப் - 2 தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நவம்பர் மாதம் இலவச பயிற்சி அளித்தது. அந்த வகுப்புகளில், 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பயிற்சி வகுப்பிற்கு, இளைஞர்களிடம் வரவேற்பு இல்லாததற்கு, பல காரணங்கள் கூறப்படுகின்றன.
* இலவச பயிற்சி வகுப்புகள் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நடத்தப்படுவது.
* போதுமான பயிற்சி கிடைப்பதில்லை என்ற நம்பிக்கை.
* பாடவாரியாக பயிற்சி கையேடு அளிப்பதில்லை.
* பெயரளவில் நடத்தப்படும் பயிற்சி.
* கடந்த பயிற்சியில் கலந்து கொண்டோர் தேர்வில் தோல்வி.
* மாதிரி தேர்வு நடத்துவது இல்லை.

காரணம் என்ன?
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு குறித்து, குரூப் - 2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூறியதாவது:
குரூப் -2 தேர்வுக்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள், அரசு பள்ளிகளில் வேலை செய்யும் திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு ஊக்கங்களை அளித்து பயிற்சிக்கு வரவழைக்கின்றனர்.
வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே பயிற்சியை தனியார் நிறுவனங்கள் அளிக்கின்றன. பாடவாரியாக கையேடு அளிக்கப்படுகிறது.
மாதிரி போட்டித்தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்படுகிறது. முந்தைய தேர்வு களின் கேள்வித்தாள்கள் பட்டியல் அளிக்கப்படுகிறது. போன்றவை தனியாரிடம் மாணவர்கள் செல்லக்காரணம். இதேபோன்று, கடுமையான பயிற்சியுடன் சிறந்த வழிகாட்டுதல், இலவசமாக கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு பள்ளிகளில் திறமையான, தகுதியான ஏராளமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை கொண்டு, அடுத்த முறையாவது, இலவச பயிற்சி வகுப்புகளை தீவிரமாக நடத்த மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்தினால் மட்டுமே, அவப்பெயரில் இருந்து தப்பிக்க முடியும்.
அதிர்ச்சி
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், "பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் கேள்வித்தாள் நகல் தொகுப்பு வழங்கப்படும். தேர்வுக்கு தேவையான புத்தகங்கள், வேலைவாய்ப்பு அலுவலக நூலகங்களில் இருந்து பெற்று படித்து பயன்பெறலாம். இலவச பயிற்சிக்கு எப்போதுமே கணிசமான இளைஞர்கள் வருவார்கள். ஆனால், இந்த முறை இளைஞர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று எங்களுக்கு புரியவில்லை" என்றார்.

No comments: