Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 9 May 2014

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மழலையர் வகுப்புகளை அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட் டம் விருத்தாசலத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமை களுக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வி.வெங்கடேசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் மழலையர் கல்வி அளிக்க வேண்டும் என 2005-ம் ஆண்டின் தேசிய பாடத் திட்ட வரைவு கூறியுள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமலாக்குவது பற்றி ஆராய்ந்த பேராசிரியர் முத்துக்குமரன் குழுவும் அனைத்து குழந்தைகளுக்கும் மழலையர் கல்வி அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 2009-ம் ஆண்டின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திலும் மாணவர்களுக்கு மழலையர் கல்வி வழங்குவது பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தில் எல்லா குழந்தைகளுக்கும் மழலையர் கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. தேசிய ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் செயல்படும் அங்கன்வாடி, பால்வாடி பள்ளிகளிலேயே தற்போது பெரும்பாலான மழலையர் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அங்கன்வாடி மையங்கள் சமூகநலத் துறையின் கீழ் செயல்படுகின்றன. கல்வித் துறையின் கீழ் வராததால் அவற்றில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் நடைபெறுவதில்லை.
இதனால் தனியார் பள்ளிகளையே பெற்றோர் நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெருமளவு பணத்தை தனியார் பள்ளிகள் நன்கொடையாக வசூலிக்கின்றன.
ஆகவே மழலைக் குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வெங்கடேசன் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments: