Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 30 April 2014

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் நீதிபதிகள் உறுதிபடுத்தினர். 6 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அகிலா உள்ளிட்ட 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு: 2013ல் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்தியது. தேர்வில் மாரியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எம்காம் படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்ததால் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அவருக்கு வேலை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
1ம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தால்தான் ஒதுக்கீடு என அப்போது கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பில் எங்கள் 6 பேருக்கும் பணி நியமனம் கிடைத்தது. 
இதை எதிர்த்து மாரியம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வியை மாரியம்மாள் தமிழில் படித்ததால், அவருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் முதலில் வெளியிடப்பட்ட பணி நியமன உத்தரவுகளை மாற்றியமைத்து, மீண்டும் முடிவுகளை வெளியிட்டனர். இதில் முதலில் தேர்வான எங்களுக்கு பணி கிடைக்கவில்லை.
எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் தமிழில் படித்தவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவர் என இவர்களில் யாருக்கு முன்னுரிமை என்பதை தீர்மானிக்க வேண்டி உள்ளது. 2010ல் கொண்டு வந்த சட்டப்படி காலி பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னு ரிமை வழங்கப்பட்டது. இந்த சட்டம் வந்த பிறகு பலர் தமிழ் வழியில் படித்துள்ளனர்.
இப்படி படித்தவர்களுக்கு வேலை வழங்குவதை மறுக்க முடியாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவு சரியே. மதிப்பெண் அடிப்படையில் அவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டு, மேல் முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர்.

No comments: