Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 2 February 2016

அண்ணாமலைப் பல்கலை 369 உதவிப் பேராசிரியர்கள்,அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 369 உதவிப் பேராசிரியர்கள், தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தார்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக பல்கலைக்கழகத்தை தமிழகஅரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
 பல்கலைக்கழக நிர்வாகியாக தமிழகஅரசின் முதன்மைச் செயலர்களில் ஒருவரான ஷிவ்தாஸ்மீனாவை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.
பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு துணைவேந்தராக பேராசிரியர் செ.மணியன் நியமிக்கப்பட்டு தொடர்ந்து நிர்வாகியாக இருந்த ஷிவ்தாஸ்மீனா வகுத்து கொடுத்தப்படி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் துறையில் பணியாற்றி வந்த 369 உதவிப் பேராசிரியர்களை, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு பொதுவிதி எண்: 11-ன் கீழ் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழகஅரசு கல்லூரி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். அதன் பேரில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 உதவிப் பேராசிரியர்களுக்கு திங்கள்கிழமை மாற்றம் குறித்த பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் பணியிலிருந்து உடனடியாக விடுவித்து, நியமிக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சென்று சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத ஊழியர்கள் 8769 பேரும், ஆசிரியர்கள் 2609 பேரும், மருத்துவக்கல்லூரியில் 355 ஆசிரியர்களும், என்எம்ஆர் ஊழியர்கள் 216 பேரும், ஆக மொத்தம் 11,949 பேர் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் 723 ஆசிரியர்களும், 2500-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் அதிகமாக உள்ளதால், நிதிநெருக்கடியை சமாளிக்க அவர்களை அரசின் மாற்றுப்பணிக்கு அனுப்பலாம் என கடந்த 2014-ம் தேதி பல்கலைக்கழக நிர்வாகியாக இருந்த ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் அரசுக்கு பரிந்துரை செய்து பட்டியலை அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து 23-12-2014 நடைபெற்ற ஆட்சிமன்றக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது முதல் கட்டமாக 369 உதவிப் பேராசிரியர்களுக்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். இதேபோன்று ஆசிரியரல்லாத ஊழியர்கள் பட்டியல் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதிசுமை சீரமைந்த பிறகு அனைவரும் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்படுவார்கள். 369 உதவிப் பேராசிரியர் மாற்றம் செய்யப்படுவதால், பல்கலைக்கழகத்திற்கு மாதத்திற்கு ரூ.2.50 கோடி நிதிசுமை குறையும் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். பேட்டியின் போது பதிவாளர் கே.ஆறுமுகம் உடனிருந்தார். 

No comments: