Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 23 April 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
இந்த உயர்வின் மூலம், ரூ.366 முதல் ரூ.4,620 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும், இதனால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள்-ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை அதே ஜனவரி மாதத்தில் இருந்து 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வானது உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366 முதல் ரூ.4,620 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
முன் தேதியிட்டு கிடைக்கும்: அகவிலைப்படியானது கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,222.76 கோடி கூடுதல் செலவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சங்கங்கள் நன்றி: அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

No comments: