Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 30 July 2014

ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிக்கும் வழக்கு - சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ்

ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ராஜ்குமார். மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் அனைத்து வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர். தமிழகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுனர்கள் என 4,582 பேர் பணியாற்றுகின்றனர். 2006ல் அரசு உத்தரவில், ஒவ்வொரு ஆண்டும் 500 ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களில் நிரப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2011 வரை இந்நியமனம் பின்பற்றப்பட்டது.
ஆனால், 2012 -13ல் 115 பேர் மட்டுமே அவ்வாறு நியமனம் செய்யப்பட்டனர். மீதியுள்ள 385 பேருக்கும், அடுத்த ஆண்டுக்கான 500 பேர் உட்பட மொத்தம் 885 பேர் நியமிக்கப்படவில்லை. எனவே அவர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதற்கிடையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை 14ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நியமன அறிவிப்பு எங்களை பாதிக்கும். எனவே அதை ரத்து செய்ய வேண்டும். 885 பட்டதாரி ஆசிரியர்களை நியமித்த பின்னர் ஏற்படும் காலியிடங்களில் அவர்கள் தெரிவித்துள்ள நியமனத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இம்மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி, நியமனங்கள் வழக்கின் இறுதித்தீர்ப்பை பொறுத்து அமையும். இதுதொடர்பாக கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டார்.

No comments: