தனியார்கள் சட்டக் கல்லூரிகளைத் தொடங்க தடை விதிக்கும் சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். மசோதாவில் குறிப்பிட்டப்பட்டுள்ள விவரம்:
குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை வழங்குவதற்கு ஏதுவாக, மாநிலத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையில் அரசின் சார்பிலேயே சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவினை எடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு தனியார்களால் (அறக்கட்டளைகள், சங்கங்கள்) குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை அளிக்க முடியவில்லை.
மேலும், சட்டக் கல்லூரிகளை நல்லமுறையில் திறம்பட தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பது கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே, தனியாக ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம், மாநிலத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் குறிப்பிட்டுள்ளது.
எங்கெங்கு கல்லூரிகள்: தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட 9 இடங்களில் அரசின் சார்பில் சட்டக் கல்லூரிகள் உள்ளன. மேலும், வி.ஐ.டி., சாஸ்த்ரா, சவீதா ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் சார்பிலும் சட்டப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறுவதன் மூலம், தமிழகத்தில் இனி இந்த கல்லூரிகளைத் தவிர்த்து வேறு தனி நபர்கள் புதிதாக கல்லூரிகளைத் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment