பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 12 (திங்கள்கிழமை) முதல் மே 16 (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்காக தனி விண்ணப்பம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் கோரியவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 5 நாள்கள் அவகாசம் உள்ளதால் மாணவர்கள் அவசரமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கான கட்டணத்தை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment