முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.) அலுவலகத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் ஓராண்டாக இழுபறியில் இருந்து வருகிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்து விட்டது; இதர பாடங்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி பட்டியலை வெளியிடக்கோரி தேர்வர்கள் கடந்த வாரம் டி.ஆர்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நேற்றும், பல மாவட்டங்களில் இருந்து வந்த 100 பேர், டி.ஆர்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு, டி.ஆர்.பி. தலைவர் விபு நய்யாரை சந்தித்து பேசினர். அப்போது, "சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தற்போது, உயர்நீதிமன்றத்திற்கு, கோடை விடுமுறை. ஜூன் மாதம் தான் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். வழக்கை விரைந்து முடித்து, இறுதி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என, விபு நய்யார் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து தேர்வர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment