Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 5 May 2014

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி விதிமுறைகள் வெளியிடுவதில் தாமதம்

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான வழிகாட்டி விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 475 தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
ஆனால், மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி விதிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழிகாட்டி விதிமுறைகள் மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டு வருகின்றன.
அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு மே இறுதியிலோ, ஜூன் இறுதியிலோ இந்த விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதனால், இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டாலும் எந்தப் பயனும் இல்லை.
வழிகாட்டி விதிமுறைகளில், ஒவ்வொரு படிப்புக்குமான கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், மாணவர் சேர்க்கைக் குழுக்களில் ஆசிரியர்களைச் சேர்க்க வேண்டும், அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போன்ற பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இந்த விதிமுறைகளைக் கல்லூரிகள் சரியாக பின்பற்றுவதில்லை. மாணவர் சேர்க்கை வழிகாட்டி விதிமுறைகளை விரைவாக வெளியிட்டு அந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை உயர் கல்வித் துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

No comments: