Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 18 April 2014

பிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி!

நீங்கள் பணியிலிருந்து திருப்தியாக வீடு திரும்பி, எந்த கவலையுமின்றி நிம்மதியாக உறங்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? ஒரு அரண்மனையையே கட்டி, அதை தங்கம் மற்றும் வைரத்தால் இழைத்து, தூங்குவதற்காக தங்கக் கட்டிலை தயார்செய்தாலும், மனதில் நிம்மதியும், அமைதியும் இல்லையேல், என்ன் பயன்?"நீங்கள் விரும்பும் பணியை தேர்வு செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்களின் வாழ்வில் ஒருநாள் கூட நீங்கள் வேலைசெய்ய வேண்டிய தேவை இருக்காது" இதை கூறியிருப்பவர் சீன தத்துவ மேதை கன்பூசியஸ்.

உலகில் அதிகளவில் திருப்திதரும் பணிகள் என்று சிலவகை பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, அவை குறித்து இக்கட்டுரை அலசுகிறது.
எழுத்தாளர்
உங்களின் எண்ணங்களை அதிக தடைகளின்றி வெளிப்படுத்த உதவும் தொழில்களில் எழுத்து துறையும் ஒன்று. எழுதுதல் என்பது வெறும் திறமை மட்டுமல்ல. உங்களின் வலிமையை நீட்டித்துக் கொள்வதுமாகும்.
சிந்தனை எனும் அழகிய மற்றும் நேர்த்தியான மாலையை, சொற்கள் எனும் பூவைக்கொண்டு, பேனா எனும் நாரின் மூலம் கட்டுவது ஒரு சிறந்த கலையம்சம் பொருந்திய செயல்பாடாகும். வாயால் பேசும் மொழியைவிட, எழுத்தின் மூலம் வெளிப்படும் மொழி அதிக தாக்கத்தை இந்த உலகில் உண்டாக்கும் என்பது நிறைய ஆதாரங்கள் உண்டு.
வாயால் பேசுவது அந்த நேரத்தில் மறைந்துவிடும். அதற்கு ஆதாரம் கிடையாது. ஆனால் எழுத்தின் மூலம் இருப்பதானது, நீண்டகாலம், ஏன், தகுந்த முறையில் பாதுகாத்தால், பல நூற்றுக்கணக்காக ஆண்டுகள் கூட நிலைத்திருக்கும்.
உங்களின் நல்ல எழுத்து உங்களை வேறு உலகிற்கு இட்டுச்சென்று உங்களின் சமூக மதிப்பையே மாற்றும். ஒரு நல்ல எழுத்தாளர், தனது ஒவ்வொரு வாழ்நாளிலும், புது வாழ்க்கையை உணர்கிறார்.
கலைஞர்
இத்துறையில் பணிபுரியும் நபர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தொழிலில், பணி திருப்தியையும், பணத்தையும் எப்படி ஒருசேர சம்பாதிக்கலாம் என்ற அனுபவத்தைப் பெறலாம். அவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் நமக்கு புலப்படும்.
இத்தொழிலில், படைப்பாக்கம், நெகிழ்வுத்தன்மை மற்றும் சுதந்திரம் போன்றவை ஒருவருக்கு கிடைக்கிறது. ஒரு அறையில் அடைபட்டு கிடக்கும் ஒரு கலைஞனின் கற்பனை பிரபஞ்சம் அளவுக்கு விரிகிறது. உலகின் இதர அம்சங்கள் அவருக்கு மறைந்து விடுகின்றன. கலை என்பது, ஒருவர் தனது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதற்கான கருவியாகும் இருக்கிறது.
உளவியல் நிபுணர்
இந்த உலகில் இருக்கும் சுவாரஸ்யமான தொழில் துறைகளில், உளவியலும் ஒன்று. மனிதனின் பல மர்மங்களையும், அவனது ஆழ்மன உலகையும் ஆராயும் இத்துறை, உண்மையில் அதிக சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு மனிதனின் செய்கைகளுக்கான உளவியல் காரணங்களை கண்டறிந்து வெளிக்கொணர்வதானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். அதேசமயம், இத்தொழிலில் சாதிக்க அதிக பொறுமை அவசியம். ஆனால், அந்தப் பொறுமை, உங்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுவரும்.
ஆசிரியர்
உலகின் மதிப்புவாய்ந்த பணிகளில், ஆசிரியப் பணி முக்கியமான ஒன்று. உதாரணமாக கூற வேண்டுமெனில், ஒரு பொறியாளர் இன்னொரு பொறியாளரை உருவாக்குகிறார். ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இன்னொரு தொல்பொருள் ஆய்வாளரை உருவாக்குகிறார். ஒரு வங்கியாளர் இன்னொரு வங்கியாளரை உருவாக்குகிறார்.
ஆனால், ஒரு ஆசிரியர், உலகின் பல துறைகள் நிபுணர்களையும் உருவாக்குகிறார். ஒரு குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே ஒரு ஆசிரியர் எடுத்தாலும், அதையும் தாண்டி மாணவர்களிடையே பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி, சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களுக்கு உண்டு.
ஒரு மாணவரின் முன்னேற்றத்தைக் கண்டு ஒரு ஆசிரியர் அடையும் சந்தோஷம் விலை மதிப்பற்றது. ஒரு மாணவருக்கு சரியான வழியை காட்டி, அவர் முன்னேற பல வழிகளில் உதவிபுரிந்து, அவரின்பால் தனிப்பட்ட அக்கறை செலுத்தி, அவரை வெற்றியடைய செய்வது, அதீத திருப்தியையும், சந்தோஷத்தையும் மட்டுமல்ல, ஒரு ஆழமான இணைப்பையும் உருவாக்கும்.
ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கும் போக்கு, நம் சமூகத்தில் பரவலாக இருப்பதை இன்றும் காணலாம். இதன்மூலம், அந்த தொழிலின் மேன்மை என்ன என்பதை நம்மால் உணர முடியும். ஆசிரியர் பணி என்பது, திருப்தியானது மட்டுமின்றி, பாதுகாப்பானதும்கூட.
என்னதான் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், யாரும், ஆசிரியரை வீட்டிற்கு அனுப்பமாட்டார்கள். ஏனெனில், அவரின் தேவை அத்தியாவசியமானது. இன்றைய நிலையில், இத்துறையில் வரும் வருமானமும் அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக பணியாளர்
மற்றவரின் சந்தோஷத்தில் தனது சந்தோஷத்தைக் காண்பது, மனித குணங்களில் மேன்மையானது. சமூகத்தில் வறிய நிலையில் இருக்கும் ஒருவரை மேலே கொண்டுவந்து, அவரின் உரிமைகளுக்காக போராடி, அவருக்கு தேவையான உதவிகளை நம்மால் இயன்றளவு செய்து, அவரின் முன்னேற்றத்திற்கு நாம் மூலகாரணமாய் இருப்பதை உணருகையில், நாம் அடையும் சந்தோஷம் அளப்பரியது. இதுதான் ஒரு சமூக சேவகரின் பணி.
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்" போன்ற புகழ்பெற்ற பொன்மொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். பிறரின் துன்பம் நம்மால் நீங்கியுள்ளது என்று நாம் உணரும்போது, நாம் அடையும் திருப்திக்கு விலை மதிப்பில்லை.

No comments: