புள்ளியியல் கல்வியில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் புள்ளியியல் படிப்புகளில் சேரும் பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்தைப் போலவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை புள்ளியியல் படிப்புகள். நமது பொருளாதார நிலைமைகள் குறித்து அறிந்து கொண்டு திட்டமிடுவதற்கும் புள்ளியியல் படிப்புகள் வழிகாட்டியாக இருக்கின்றன. கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளைப் படிக்கும் மாணவர்கள் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்ற புள்ளியியல் பாடத்தை ஒரு பாடமாகப் படிக்கிறார்கள். இளநிலைப் பட்ட நிலையிலும் புள்ளியியல் பாடத்தைத் தனிப்பாடமாக எடுத்துப் படித்தாலும்கூட அப்பாடத்தையே தனிப் பாடமாகப் படித்து பட்டம் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. புள்ளியியல் துறையில் உள்ள படிப்புகளை கற்றுத் தருவதற்கென நாட்டிலேயே உள்ள மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழ்வது கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட் (ஐ.எஸ்.ஐ.). இந்தக் கல்வி நிறுவனத்திற்கு தில்லியிலும் பெங்களூரிலும் வளாகங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் புற அலுவலகங்களும் உள்ளன. இந்தியன் ஸ்டாட்டிஸ்ட்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆய்வு நிறுவனங்களிலும் பணியில் சேரலாம்.
கொல்கத்தா மையத்தில் பி.ஸ்டாட். (ஆனர்ஸ்) என்ற மூன்று ஆண்டு படிப்பும் பெங்களூரு மையத்தில் பி.மேத். (ஆனர்ஸ்) என்ற மூன்று ஆண்டு படிப்பும் கற்றுத் தரப்படுகின்றன. இந்த இளநிலைப் பட்டப்படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ வகுப்பில் கணிதப் பாடத்தையும் ஆங்கிலப் பாடத்தையும் படித்திருக்க வேண்டும். பி.ஸ்டாட். (ஆனர்ஸ்) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு புள்ளியியல் தொடர்பான பாடங்களுடன் கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன. இப்படிப்பைப் படித்து முடித்த மாணவர்கள் புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம். பி.ஸ்டாட். (ஆனர்ஸ்) படிப்பை முடித்து விட்டால் எம்.ஸ்டாட். படிப்பில் நேரடியாகச் சேரவும் வாய்ப்புகள் உள்ளன. பி.மேத். (ஆனர்ஸ்) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டிங், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் கற்றுத்தரப்படுகின்றன. இப்படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டிங், இயற்பியல் துறைகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
இந்த இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக எழுத்துத் தேர்வும் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வு மாதிரி வினாத்தாள்கள் இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய தேசிய கணித ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எழுத்துத் தேர்வை எழுத வேண்டியதில்லை. அந்த மாணவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்தியன் ஸ்டாட்டிஸ்டிடிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கச் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையைத் தொடர்ந்து பெற, மாணவர்கள் சிறப்பாகப் படித்து வர வேண்டியது அவசியம்.
இந்தக் கல்வி நிலையத்தில் பல்வேறு முதுநிலைப் படிப்புகளும் உள்ளன. எம்.ஸ்டாட். படிப்பை தில்லி வளாகத்திலும் மற்றும் சென்னையிலும் படிக்கலாம். பெங்களூரு மையத்தில் எம்.மேத். படிப்பைப் படிக்கலாம். குவான்டிட்டேட்டிவ் எகனாமிக்ஸ் பாடப்பிரிவில் எம்.எஸ். படிப்பை கொல்கத்தா, தில்லி வளாகங்களில் படிக்கலாம். லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் பாடப்பிரிவில் எம்.எஸ். படிப்பை பெங்களூரு வளாகத்தில் படிக்கலாம். இந்த முதுநிலைப் படிப்புகளில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக். படிப்பையும் குவாலிட்டி, ரிலையபிலிட்டி அண்ட் ஆபரேஷன் ரிசர்ச் பாடப்பிரிவில் எம்.டெக். படிப்பையும் கொல்கத்தா வளாகத்தில் படிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
புள்ளியியல், கணிதம், குவான்டிடேட்டிவ் எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், குவாலிட்டி - ரிலயபிலிட்டி அண்ட் ஆபரேஷன்ஸ் ரிசர்ச், பயாலஜிக்கல் ஆந்தரபாலஜி, பிசிக்ஸ் அண்ட் அப்ளைடு மேத்மேட்டிக்ஸ், அக்ரிக்கல்ச்சர் அண்ட் ஈக்காலஜி, சமூகவியல், ஜியாலஜி, ஹியூமன் ஜெனிட்டிக்ஸ், உளவியல், லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், மொழியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் (JRF) பெற்று இதன் பல்வேறு மையங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளன. ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும்.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட் அலுவலகத்தின் வேலை நாட்களில் காலை 11 மணியிலிருந்து 2 மணி வரை இப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் உள்ள இந்தக் கல்வி நிறுவன அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஜே.ஆர்.எஃப்.
தவிர மற்ற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் ரூ.500. விண்ணப்பிப்பதற்கான முறைகள், பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட் கல்வி நிலையத்தில் கணிதம், புள்ளியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
இந்தப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி: 01.3.2013.
பூர்த்தி செயப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 6.3.2013.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 6.3.2013.
மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.5.2013.
விவரங்களுக்கு: http://isical.ac.in
No comments:
Post a Comment