Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 30 November 2012

IIT - NIT பொது நுழைவுத் தேர்வு


ஐஐடிக்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (ஏஇஇஇ) விடை கொடுக்கப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக தற்போது பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் மெயின் தேர்வின் முதல் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் முதல் தாளாக முன்பு இருந்தது) எழுத்துத் தேர்வாக எழுதலாம். கம்ப்யூட்டர் மூலமும் எழுதலாம். ஏப்ரல் 7ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்கான மெயின் தேர்வின் இரண்டாம் தாளை (ஏஐஇஇஇ தேர்வில் இரண்டாம் தாளாக இருந்தது) எழுத்துத் தேர்வாக (Offline mode) மட்டும் எழுதலாம்.  இந்தத் தேர்வு ஏப்ரல் 7ம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.

மெயின் தேர்வின் முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். குஜராத் மாநில மையங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் குஜராத்தி மொழியில் வினாத்தாள்களைப் பெறலாம். எந்த மொழியில் வினாத்தாள் என்பதை விண்ணப்பிக்கும் போதே குறிப்பிட வேண்டும். இரண்டாம் தாளில் ஏற்கெனவே ஏஐஇஇஇ தேர்வில் இருந்தது போலவே கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரங்கள் வழங்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 1988ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு. 2011-ஆம் ஆண்டிலோ அல்லது 2012-ஆம் ஆண்டிலோ பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 2013-ஆம் ஆண்டில் நடைபெறும் பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 2010-ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்போ பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்க முடியாது.

இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து புகைப்படத்தை ஒட்டி இடது கைப் பெருவிரல் ரேகையை வைத்து மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். பெற்றோரின் கையெழுத்தும் தேவை. அத்துடன், ஏற்கெனவே படித்த பள்ளியின் முதல்வர் அல்லது கெஜட்டட் அதிகாரியின் கையொப்பத்தைப் பெற்று அந்த விண்ணப்பத்தை தில்லியில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் செயல் இயக்குநர் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மெயின் தேர்வில் முதல் தேர்வை மட்டும் எழுதுகிறோமா அல்லது இரண்டாவது தேர்வை எழுதுகிறோமா அல்லது இரண்டு தேர்வுகளையும் சேர்த்து எழுதுகிறோமா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன் காகிதத்தில் எழுதும் எழுத்துத் தேர்வை எழுதுகிறோமா அல்லது கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகிறோமா என்பதையும் குறிப்பிட வேண்டும். அதைப் பொருத்து கட்டணம் வேறுபடும். விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். தமிழகத்தில் சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் காகிதத்தில் எழுதும் எழுத்துத் தேர்வை எழுதலாம். கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அத்தேர்வை தமிழகத்தில் சென்னையில்தான் எழுத முடியும். தேர்வு எழுத விரும்பும் மூன்று நகரங்களின் பெயர்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். தேர்வு மையங்களில் இடம் இருப்பதைப் பொருத்து தேர்வு எழுத வேண்டிய ஊர் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுடன், வேதியியல், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். கணிதத்தில் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுடன் பிளஸ் டூ மதிப்பெண்களும் என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் தயாரிப்பதில் கணக்கில் கொள்ளப்படும். அதாவது, மெயின் நுழைவுத் தேர்வுக்கு 60 மதிப்பெண்கள், பிளஸ் டூ தேர்வுக்கு 40 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டு என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் வழங்கப்படும். இந்தத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிறுவனங்களும் பல உள்ளன. அந்தப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மெயின் தேர்வு முடிவுகளும் இத்தேர்வில் 1.5 லட்சம் ரேங்கிற்குள் வந்துள்ள மாணவர்கள் பட்டியலும்  மே 7-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 புவனேஸ்வரம், சென்னை, தில்லி, காந்திநகர், குவாஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ரோபார், ரூர்க்கி, வாரணாசி ஆகிய இடங்களில் ஐஐடிக்கள் உள்ளன. இதுதவிர, தன்பாத்தில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். மெயின் தேர்வில் 1.5 லட்சம் ரேங்க்கிற்குள் வரும் மாணவர்கள் மட்டுமே ஐஐடிக்களில் சேருவதற்கான அட்வான்ஸ்ட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த அட்வான்ஸ்ட் தேர்வு எழுதும் மாணவர்கள் போர்டு தேர்வுகளில் முதல் 20 பெர்சன்டைலுக்குள் இருக்க வேண்டும். இந்த அட்வான்ஸ்ட் தேர்வை ஐஐடியே நடத்துகிறது. மெயின் தேர்வில் 75,750 பேர் (50.5 சதவீதம்) பொதுப் பிரிவின்கீழ் அட்வான்ஸ்ட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவீத இடங்கள் அதாவது 40,500 பேரும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவீத இடங்களும் அதாவது 22,500 இடங்களும் பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடங்களும் இருக்கும். 3 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மாணவர்கள்தான் அட்வான்ஸ்ட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஐஐடி அட்மிஷனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஐஐடியில் சேருவதற்கான தகுதி குறித்த விவரங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் ஐஐடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஐடி அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 8-ஆம் தேதியிலிருந்து மே 13-ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல் தாள் ஜூன் மாதம் 2-ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து 12 மணி வரையிலும் நடைபெறும். இரண்டாவது தாள் அதே நாளில் பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். முதல் தாளிலும் இரண்டாவது தாளிலும் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும். ஆர்க்கிடெக்ச்சர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான திறனறித்தேர்வு ஜூன் 28-ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அத்தேர்வு முடிவுகள் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. மெயின் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: டிசம்பர் 15
 
விவரங்களுக்கு: www.jeemain.nic.in  /  www.jeeadv.iitm.ac.in

No comments: