Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 22 April 2012

மத்திய அரசுப் பணிகளில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

விஷ்வபாரதி

மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணிகளில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வை எழுத வேண்டும்.

மத்திய பொதுப் பணித் துறை, புலனாய்வுத் துறை, மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, ரயில்வே துறை, மத்திய வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, மத்திய அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவியாளர்கள் பணி, ஆடிட்டர், கணக்கீட்டாளர், இளநிலை கணக்கீட்டாளர் போன்ற பல்வேறு பதவிகளில் காலிப் பணியிடங்கள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த போட்டித் தேர்வை எழுத பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கம்பைலர் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் ஆகிய பாடங்களை கட்டாயப் பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும். ஸ்டாட்டிஸ்டிக்கல்  இன்வஸ்ட்டிக்கேட்டர் கிரேட்-2 பணியில் சேர விரும்புபவர்கள் புள்ளியியலை முக்கியப் பாடப்பிரிவாக எடுத்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்து புள்ளியியலையும் ஒரு பாடமாக எடுத்துப் படித்த பட்டதாரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம் அல்லது வணிகவியல் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்து புள்ளியியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்த பட்டதாரி மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களுக்கு ஏதாவது பட்டப் படிப்புப் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயத் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதரத் தகுதி விவரங்கள், ஸ்டாப் செலக்ஷன் இணைய தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வு எப்படி நடைபெறுகிறது?
இந்தத் தேர்வு மூன்று அடுக்குகளாக நடைபெறும். முதல் இரண்டு அடுக்குத் தேர்வுகளும் எழுத்துத் தேர்வுகள். இத்தேர்வுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். இதையடுத்து நேர்முகத் தேர்வு, கம்ப்யூட்டர் திறன் சோதனை பர்சனாலிட்டி டெஸ்ட், ஸ்கில் டெஸ்ட் இவற்றில் பணிகளைப் பொருத்து தேவையான தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வஸ்ட்டிக்கேட்டர் கிரேடு-2 பணி அல்லாத மற்ற பிரிவுக்கான முதல் அடுக்குத் தேர்வில் ஜெனரல் இன்டலிஜென்ட்ஸ், ஜெனரல் அவேர்னெஸ், குவாலிட்டேட்டிவ் ஆப்டிட்யூட், இங்க்லீஷ் காம்ரிஹென்சன் ஆகிய பிரிவுகளில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் இரண்டு பிரிவுகள் உண்டு. முதல் பிரிவில் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டிஸ் குறித்த கேள்விகளும், இரண்டாவது இங்க்லீஷ் லாங்க்வேஜ் அண்ட் காம்ப்ரிஹென்சன் குறித்த கேள்விகளும் கேட்கப்படும். முதல் அடுக்குத் தேர்வுக்கு இரண்டு மணி நேரமும் அதையடுத்த இரண்டு பிரிவுத் தேர்வுகளுக்கும் தலா 2 மணி நேரமும் வழங்கப்படும். பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் வழங்கப்படும். இதையடுத்து நேர்முகத் தேர்வும் உதவியாளர் (சிஎஸ்எஸ்) பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

கம்பைலர் பணி அல்லாத மற்ற (நேர்காணல் இல்லாத) பணியிடங்களுக்கு முதல் அடுக்கு இரண்டாம் அடுக்குத் தேர்வுகள் இருக்கும். அதையடுத்து, டாக்ஸ் அசிஸ்டென்ட் பணியில் சேருபவர்களுக்கு டேட்டா என்ட்ரி ஸ்கில் டெஸ்ட் இருக்கும்.

ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்வஸ்ட்டிக்கேட்டர் கிரேடு-2 பணிக்கு முதல் அடுக்குத் தேர்வும் இரண்டாம் அடுக்குத் தேர்வும் இருக்கும். இந்த விண்ணப்பதாரர்கள் இரண்டாம் அடுக்குத் தேர்வில் மூன்றாவது தாளாக புள்ளியியல் தேர்வை எழுத வேண்டியதிருக்கும். அதையடுத்து இந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த எழுத்துத் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

எப்போது தேர்வு நடைபெறுகிறது?
பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டித் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் கோயமுத்தூர், சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது.

முதல் அடுக்கு தேர்வு வருகிற ஜூலை 1ம் தேதியும் ஜூலை 8ம் தேதியும் நடைபெறும். இரண்டாம் அடுக்குத் தேர்வில் மூன்றாம் தாளான புள்ளியியல் தேர்வு, செப்டம்பர் 15ஆம் தேதியும், குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் தேர்வான முதல் தாள் செப்டம்பர் 16 ஆம் தேதி காலையிலும், ஆங்கில மொழித் திறனுக்கான இரண்டாம் தாள் செப்டம்பர் 16ம் தேதி பிற்பகலிலும் நடைபெறும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்தப் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை தபாலில் அனுப்பும் விண்ணப்பதாரர்கள், ரூ.100க்கான சென்ட்ரல் ரெக்ரூட்மெண்ட் ஃபீஸ் ஸ்டாம்ப்பை விண்ணப்பத்தில் ஒட்டி, அனுப்ப வேண்டும். அந்த ஸ்டாம்பில் தபால் அலுவலரால் குறுக்கே கோடிட்டிருக்க வேண்டும். காசோலை, வரைவோலை மற்றும் மணியார்டர் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தக்கூடாது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் ஆன்லைன் மூலமாகவோ செலானாகவோ செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இந்த ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 20.

விவரங்களுக்கு  :www.ssc.nic.in

No comments: